Social Icons

Wednesday 30 October 2013

அரசுப்பள்ளி என்றால் அவ்வளவு அலட்சியமா ?

அரசாங்கப்பள்ளி என்றாலே அவ்வளவாக யாரும் மதிப்பதில்லை..மக்களின் பார்வையில் பல்வேறு காரணங்கள் இருக்கலாம்...ஆனால் நேரடியாக வந்து பார்ப்பவர்களால் மட்டுமே அரசுப்பள்ளியின் குறைபாடுகளுக்கான காரணங்களைப் புரிந்துகொள்ள முடியும்..

மக்களின் பார்வையில் அரசுப்பள்ளி மீது சாட்டப்படும் குற்றச்சாட்டுக்கள்,,

1.மாணவர்கள் ஒழுங்காகப் படிப்பதில்லை.

2.மாணவர்கள் ஒழுக்கமாக இல்லை..

3.மாணவர்கள் அழகாக உடையணிந்து வெளிநாட்டுக்காரன் மாதிரி இல்லை.

4.பள்ளி வளாகம், வகுப்பறைகள் அழகாக இல்லை.

5.பல்வேறு மொழிக்கற்பித்தல் இல்லை.

   இன்னும் பலப்பல கூறிக்கொண்டே இருப்பார்கள்...

ஆனால் தனியார் பள்ளிகளில் படிப்பதால் மட்டுமே ஒருவன் வாழ்க்கையை சுயசார்புள்ளவனாக வாழ்ந்துவிட முடியாது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்..

தனியார் பள்ளி மாணவர்களுக்கு தன் சொந்தக்காலில் நிற்கும் திறமை இருக்குமா என்பதே சந்தேகமே...

மனப்பாடம் மட்டுமே செய்து வாந்தி எடுக்கும் அவர்கள் மேல்படிப்புகளில் பெரிதாக ஜொலிப்பதில்லை..

எல்லாவற்றிற்கும் பிறரைச் சார்ந்தே இருப்பர்..ஒரு சிறிய வேலையைக்கூட சொந்தமாக செய்துகொள்ள இயலாதவர்களாத்தான் இருப்பார்கள்.

அதிகமான தனியார் பள்ளிகளில் உடற்பயிற்சி,விளையாட்டு என்ற பாடவேளையே இருப்பதில்லை..அப்பறம் எப்படி அவர்களால் உடல்திறனோடு இருக்கமுடியும்..

இலட்ச இலட்சமாய் பணத்தை செலவு செய்து படிக்கும் அவர்கள் பணம் சம்பாதிப்பதில் மட்டுமே குறியாக இருப்பார்கள்..அவர்களிடம் அன்பு,கருணை,மனிதாபிமானம் ஆகியவற்றை நிச்சயமாய் எதிர்பார்க்க முடியாது..

சாலையில் ஒருவன் அடிபட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும்போது ஓடிச்சென்று அவனுக்கு உதவி செய்யும் முதல் ஆள் அரசுப்பள்ளியில் படித்த ஒருவனாகத்தான் இருப்பான்..வாழ்க்கையின் இக்கட்டான ஒரு சூழலில் சாதாரண ஒரு செயலைக்கூட தானே செய்து கொள்ளும் ஆற்றல் அரசுப்பள்ளி மாணவனுக்குத்தான் இருக்கும் ..அங்கே தனியார் பள்ளியில் படித்தவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல்தான் தவித்து நிற்பார்கள்..

அடுத்தவங்கள குறைசொல்றத விட்டுட்டு உன் முதுகை முதலில் பார் என்று நீங்கள் சொல்வது புரிகிறது...உண்மைதான் அரசு பள்ளிகளில் ஆங்காங்கே குறைகள் இருப்பதையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்...

ஆனால் தனியார் பள்ளிகளின் மாயையான தோற்றத்தைக்கண்டு அரசுப்பள்ளிகளைக் குறைத்து மதிப்பிடாதீர்கள் என்பதே என் கருத்து...அரசுபள்ளிகளிலும் எந்நேரமும் மாணவர்களின் நலனையும் பள்ளியின் வளர்ச்சியையும் பற்றி மட்டுமே சிந்திக்கும் இலட்சக்கணக்கான ஆசிரியர்கள் இங்கே இருக்கிறார்கள்...இப்பதிவை அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்கிறேன்...

நான் காரைக்காலில் பணிபுரிந்தபோது ஒருஆசிரியை சரியாக 9.30 மணிக்கு பள்ளிக்கு வருவார்...ஏதோ பெரிய உலக அரசியல் அறிஞர் போல கையில் செய்தித்தாளோடுதான் பள்ளிக்கு வருவார்...காலையில் வகுப்புக்குள் சென்றதும் செய்தித்தாளைப் பிரித்துப் படிக்கத் தொடங்குவார்...மாலையில் வீட்டுக்குச் செல்லும் வரை செய்தித்தாளின் ஒருவரியைக்கூட விடாமல் படித்துமுடித்து விட்டுத்தான் வீட்டுக்குச் செல்வார்...அவரின் கடமை உணர்ச்சியைக்கண்டு பலசமயங்களில் நான் மெய்சிலிர்த்ததுண்டு..

நல்ல ஆசிரியர்களுக்கு மத்தியில் இதுபோன்ற ஒருசில புல்லுருவிகளால்தான் அனைத்து ஆசிரியர்களுக்கும் அவப்பெயர்...என்ன பிரச்சினையென்றால் மற்ற அரசுத்துறைகளில் தவறு செய்தால் பெரிதாக எந்த இழப்பும் ஏற்படாது..ஆனால் ஒரு ஆசிரியர் சரியில்லையென்றால் அவரிடம் படிக்கும்  அத்தனை மாணவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும் என்பதை அவர்கள் உணரவேண்டும்...நிச்சயம் அவர்கள் உணரமாட்டார்கள்..

நம்ம நாட்டுல எப்பவுமே அன்பா சொன்னா எவணும் கேக்க மாட்டான்..தண்டனை கிடைக்கும் என்ற பயம்வந்தால் மட்டுமே ஒழுங்கா வேலை செய்வாங்க..அத்தகைய ஆசிரியர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்.. அப்படி நடந்தால் அரசுப்பள்ளிகளும் ஒருநாள் அகிலத்தில் உயரும்...

ஏதேதோ எழுத நினைத்து எங்கேயோ முடித்திருக்கிறேன்...பின்னூட்டங்களில் மீதமிருப்பவற்றை அலசுவோம்...நன்றி...

No comments:

Post a Comment